(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை பிறிதொருவருக்கு ஏற்படலாம். ஆகவே சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கில் வெறுப்புக்களை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்படுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.
பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அமைச்சரவையின் அனுமதியுடன் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்த நபரின் தேவைக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கை தொடர்பில் எம்மிடம் மாறுபட்ட நிலைப்பாடு இருக்கலாம். இருப்பினும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கும்போது அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
06 மாத காலத்துக்குள் நாட்டை முன்னேற்றுவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய அடிப்படை வாக்குறுதிகளை மறந்துவிட்டு அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை முடக்கி சர்வாதிகாரமான முறையில் ஆட்சியியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை பிறிதொருவருக்கு ஏற்படலாம். ஆகவே சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment