(இராஜதுரை ஹஷான்)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யூடியூபரான சுதா என்பவர் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு செய்துள்ளார். இது நீதவான்களுக்கு பிரயோகிக்கும் மறைமுக அழுத்தமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை தோற்கடிக்க அரசியல், கட்சி பேதமின்றிய வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அத்துடன் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்துச் செய்தார்.
2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்தபோது தனி மனிதனாக சவால்களை பொறுப்பேற்று நாட்டை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தார். அந்த கௌரவத்தை அவருக்கு வழங்க வேண்டும்.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளோம் என்று மார்புத்தட்டிக் கொள்ளும் சூழலை இந்த அரசாங்கத்துக்கு ரணில் விக்கிரமசிங்கதான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.
அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு குழு ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்தான் உள்ளார்கள். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள்.
பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இந்த கண்காணிப்பை 'பி.ஆர்' என்பவர்தான் வழிநடத்தியுள்ளார். ஆகவே இது அரசியல் பழிவாங்களின் முழு வடிவத்தையும் வெளிப்படுத்துகிறது.
சுதத எனும் யூடியுபரின் செயற்பாடு நீதித்துறைக்கு விடுத்த கடும் அச்சுறுத்தலாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நபர் 'ரணில் விக்கிரமசிங்க 14 நாட்கள் சிறை செல்வார், அவ்வாறு நடக்காவிடின் தான் யூடியூபர் தொழிற்றுறையில் இருந்து விலகுவதாக' குறிப்பிட்டுள்ளார்.
இவர் மக்கள் விடுதலை முன்னணிக்காகவே செயற்படுகிறார். இவ்வாறான கருத்துக்கள் நீதவான்களுக்கு பிரயோகிக்கும் மறைமுக அழுத்தமாகும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு சட்டத்தால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்றதொரு செயற்பாடு.
No comments:
Post a Comment