2019ஆம் ஆண்டு “தர்மசக்கரம்” பதித்த ஆடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு பெண்ணொருவரை கைது செய்து அவரை தடுத்து வைத்தமை ஊடாக அசலக்க பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்தது.
அவ்வாறு கைது செய்யப்பட்ட கொலன்டாவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அப்துல் ரஹீம் மஸாஹிமா என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்களின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்த தீர்ப்பினை அறிவித்தார்.
அதற்கமைய குறித்த பெண்ணை கைது செய்த அசலக்க பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்தன நிஷாந்த தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாவை மனுதாரருக்கு செலுத்துமாறு நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.
இந்த நட்டயீட்டு தொகையை செலுத்துவதற்காக பொலிஸ் திணைக்களத்தின் நிதியம் அல்லது பொலிஸ் கூட்டு நிதியம் பயன்படுத்தப்படமாட்டாது என்பதை பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை சட்டத்தின் 3 (1) உறுப்புரையின் பிரகாரம் கைது செய்யப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான சுற்றறிக்கை சட்டமா அதிபரின் அனுமதியுடன் பொலிஸ் நிலையங்களுக்கு வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தது.
மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமான்ன மன்றில் விடயங்களை முன்வைக்கையில், எனது சேவை பெறுநர் தர்மசக்கரம் பொறித்த ஆடையை அணிந்ததற்காக கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு பின்னர் அது கப்பல் சுக்கானம் என குறிப்பிட்டார்கள்.
இதற்கமைய அது ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான உடன்படிக்கை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைப்பது சட்டத்துக்கு விரோதமானது என சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவடரங்கிய நீதியரசர் குழாம் இந்த கைதின் ஊடாக அசலக்க பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளித்தது.
2019ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி அன்று அசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தர்மசக்கரம் பொறித்த ஆடையை இந்த மனுதாரர் அணிந்திருந்தாக கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்து தடுத்து வைத்ததால் பொலிஸார் தனது அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதி குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் உடன்பட்டு அடிப்படை உரிமைகள் விண்ணப்பத்தை அனுமதித்தனர்.
2019 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை பதுளை சிறைச்சாலையில் தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உடையில் தம்மசக்கரத்திற்கு மாறாக கப்பல் சக்கரம் ஒன்றே பொறிக்கப்பட்டிருந்ததாகவும், "எந்தவொரு இனத்தவரின் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் வேண்டுமென்றோ அல்லது துன்புறுத்தும் வகையில் அவமதிப்பது எனது நோக்கம் இல்லை எனவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment