இலங்கையில் ஹஜ் - உம்ரா யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்குமென புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இதன்படி, ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகைகளின்போது மோசடியில் ஈடுபடும் முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 5 முதல் 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்டத்தினை வரைவதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ.சலாம் தலைமையில் குழுவொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பீ. லுதுபுர் ரஹ்மான், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுழார், வக்பு நியாய சபையின் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஏ.எம். இல்யாஸ், சட்டத்தரணி அக்ரம் வசீம், ஹஜ் நிதியம் தொடர்பான வங்கியாளரும் சிரேஷ்ட பணிப்பாளருமான சப்றி கௌஸ் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர். இந்தக் குழுவின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ரயாஸ் பணியாற்றினார்.
இந்த வரைபுக் குழுவின் இறுதி அறிக்கை செவ்வாய்க்கிழமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 15 இலட்சம் ரூபா பணத்தினை வைத்திருக்கின்ற அனைத்து இலங்கை முஸ்லிம்களும் ஹஜ் கடமையினை நிறைவேற்றும் நோக்கிலேயே வரைபுக் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும கலாசார அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளின்போது மோசடியில் ஈடுபடும் முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 5 முதல் 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு புத்தசாசன, சமய மற்றும கலாசார அலுவல்கள் அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோசடியில் ஈடுபடுகின்ற ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிறுவனங்களை நீதிமன்றத்தின் ஊடாகத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் செயற்படுவது போன்று ‘ஹஜ் மிஷன்’ இலங்கையிலும் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகைகளை நிறைவேற்றுவதற்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பிரேரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஹஜ் மற்றும் உம்ரா முகவர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு துறைசார் நிபுணர்களைக் கொண்ட சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்.
இச்சபை உறுப்பினர்களின் தகைமைகள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த சபையின் சிபாரிசுகளுக்கமைய நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரங்கள் வழங்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வரைபு குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
அறிக்கை கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கி ஹஜ் சட்ட மூலத்தினை தயாரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரத்தினை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment