வெளிநாடுகளில் முதல் முறையாக வேலைவாய்ப்புக்காக செல்வோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன்னர், அந்தந்த நாட்டில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்திடமிருந்து தமது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களின் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் அவசியம் தமது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களின் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
தொழிலுக்காக புறப்படுவதற்கு முன்னர் ஒப்பந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொழில்முறை பிரிவுகளில் சுயதொழில் செய்வதற்காக பயணிக்கும் நபர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. அத்தகைய நபர்கள் தங்கள் தொழிலைக் குறிக்கும் கடவுச்சீட்டை அல்லது செல்லவுள்ள நாட்டில் அவர்களின் தொழில்முறை நிலையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடிந்தால் அவர்களுக்கு இதிலிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment