வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 29, 2025

வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்கள்

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளை உள்ளடக்கியும் பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அருகிலும் மருந்தகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன் பிரகாரம், நாட்டிலுள்ள 130 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளை உள்ளடக்கியும், பிரபல தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகிலும் அரச மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 65 ஆவது மருந்தகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த மருந்துகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி, அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தர ஆய்வகத்தில் ஏழு முறை பரிசோதிக்கப்பட்ட பின்னரே சந்தைக்கு விடுவிக்கப்படும். பொதுமக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளைப் பெறுவதற்கு இது வழிவகுக்கும். 

2024 ஆம் ஆண்டு முழுவதும் 68 டெண்டர்கள் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 268 டெண்டர்கள் மருந்து கொள்வனவுக்காக வெளியிடப்பட்டன. இதனால், கொள்வனவுகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு உயர்தர மருந்துகள் முறையாக வழங்கப்படும். 

வௌிநாடுகளிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் விசேட திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment