(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் தாமதங்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு காரணமாகவே கடந்த பல நாட்களாக அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்திருந்தார்.
துறைமுகம் வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 1,200 கொள்கலன்கள் கையாளப்பட்டன. எனினும் அண்மைய நாட்களில் அந்த எண்ணிக்கை 2,900 வரை உயர்ந்து, குறிப்பிடத்தக்க நெரிசலை உருவாக்கியது. இதனால் அவற்றை விடுவிப்பதற்கு அனுமதி வழங்கும் செயல்முறையை மந்தப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை (29) காலை நிலைவரப்படி, வெளியிட திட்டமிடப்பட்ட அனைத்து நிலுவையில் உள்ள கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டு, வழக்கமான அனுமதி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment