அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு ஐக்கிய மக்கள் சக்தி வசமானது கிண்ணியா நகர சபை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு ஐக்கிய மக்கள் சக்தி வசமானது கிண்ணியா நகர சபை

கிண்ணியா நகர சபையின் கன்னி அமர்வு செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும், தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.

இதன்போது, கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவிக்காக இடம்பெற்ற, பகிரங்க வாக்களிப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தவிசாளர் வேட்பாளர் எம்.எம். மஹ்தி வெற்றி பெற்றுள்ளார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபையில், 09 வாக்குகளை எம்.எம். மஹ்தி பெற்றுக் கொண்டதோடு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தவிசாளருக்காக போட்டியிட்ட அஷ்ரப் இம்ரான் 02 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

தவிசாளர் தெரிவின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் எம்.எம். மஹ்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 3 உறுப்பினர்களும், இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும், தவிசாளர் தெரிவின்போது, நடுநிலைமை வகித்தனர்.

உதவி தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். அப்துல் அசீஸ் போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கிண்ணியா நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு, ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட, கிண்ணியா நகர சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், பெற்றுக்கொண்டன.

பொதுசன ஐக்கிய முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment