இலங்கை - இந்தியாவுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி இந்த மனு நேற்றையதினம் (16) உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளான எஸ். துரைராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது
சட்டமா அதிபர் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் குறித்த மனு தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசனை பெற்றுக்கொண்டு வாதங்களை முன்வைப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதி வழக்குமாறும் நீதிமன்றத்தை அவர், கோரியுள்ளார்.
நீதிபதிகள் குழாம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியதுடன், மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து இந்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த ஒரு திகதியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழாம் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
இந்த மனுவை டாக்டர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் சமர்ப்பித்திருந்ததுடன் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment