விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம் இராணுவத்தினருக்கு முன்னுரிமையளிப்பதில்லை : புலனாய்வுப் பிரிவை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரயோசனம் இல்லை - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம் இராணுவத்தினருக்கு முன்னுரிமையளிப்பதில்லை : புலனாய்வுப் பிரிவை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரயோசனம் இல்லை - நாமல் ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

நாட்டின் இராணுவ வீரர்களுக்காகவும், ஒற்றையாட்சிக்காகவும் என்றும் நாம் முன்னிற்போம். ஆனால் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கு முன்னுரிமையளிப்பதில்லை. விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தால் இடையூறு விளைவிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இராணுவ வீரர்களுக்காகவும், ஒற்றையாட்சிக்காகவும் என்றும் நாம் முன்னிற்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் இராணுவத்தினருக்கு முன்னுரிமை இல்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் விமானத்தில் வியட்நாமிலிருந்து வருகை தருமளவுக்கு தேர்தலுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இராணுவ வீரர்களுக்கும் வழங்க வேண்டும்.

அதேவேளை யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு சகல முன்னாள் அரச தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இராணுவத்தினர் பழி வாங்கப்பட்டனர். புலனாய்வுப் பிரிவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன. தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்கியுள்ளன. நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுமளவுக்கு புலனாய்வு பிரிவு பலவீனமடைந்துள்ளது.

புலனாய்வுப் பிரிவை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரயோசனம் இல்லை. எனவே புலனாய்வுப் பிரிவை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தால் இடையூறு விளைவிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment