வைத்தியர் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : மரண தண்டனையை மாற்றி விடுதலை செய்த நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

வைத்தியர் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : மரண தண்டனையை மாற்றி விடுதலை செய்த நீதிமன்றம்

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன்,அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மகப்பேற்று வைத்திய நிபுணரான முகம்மட் சுல்தான் மீரா முகைதீன் என்ற வைத்தியர் கடமை முடித்து மாலை 6.45 முதல் 7 மணி வரையான நேரத்தில் வீடு செல்ல தயாரான போது தனியார் வைத்தியசாலை வாயிலில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய பிளட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இவ் தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment