வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு வீதியால் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியோரமாக விழுந்து இறந்துள்ளார்.
குறித்த பகுதியில் மதுபானசாலை அமைந்திருந்த நிலையில் நபரை இலக்கு வைத்து வீதியில் நின்ற பொலிஸார் விரட்டிச் சென்றமையால் குறித்தநபர் விழுந்து இறந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 58 வயதான இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்பவரே மரணமடைந்தவராவார்.
இதன்போது, மதுபானசாலையில் இருந்து வெளியில் வந்த பலர் வீதியில் இறந்து கிடந்தவருக்கு அருகில் சென்ற போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது 4 போக்குவரத்து பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பயணித்த இரு மோட்டர் சைக்கிள்களும் தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையாக சேதமடைந்துள்ளன.
காயமடைந்த பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து அங்கு கப் ரக வாகனத்தில் வந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் கப் ரக வாகனம் சேதமடைந்துள்ளதுடன் அதன் சாரதியான பொலிஸாரும் காயமடைந்துள்ளார். இதன்போது வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
அத்துடன், வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரைவழைக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
பொலிஸாருக்கும் அங்கு குழுமியவருக்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த பாராமன்ற உறுப்பினரும், வைத்தியருமான ப.சத்தியலிங்கம் வீதியில் விழுந்து கிடந்தவர் இறந்ததை உறுதி செய்தார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேஜ் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி வைத்தியாலைக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து அங்கு குழுமியிருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தில் சடலம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் விளைவித்தனர்.
இதேவேளை, வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 4 பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்து விட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.
பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்று (12) காலை தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன் நீதிபதியும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் சிறப்பு குழுக்களை நியமித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment