ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நமது மாணவர்கள் ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிக்க சென்றவேளை மாணவர்கள் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறியக்கிடைத்தது. அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளே இதற்கு முக்கிய காரணம்.
மலசல கூடங்களை சுத்தப்படுத்த ஆளனிப்பற்றாக்குறை மற்றும் அதற்கான போதிய நிதி உதவியின்மை போன்ற குறைகள் உள்ளன.
இதனால் மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன் சிறுநீரை வெளியேற்றாமல் வைத்துக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடும்.
இப்பிரச்சினைகள் மிகவும் அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுடன் ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
இது குறித்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்தி அதிபருடன் கலந்துரையாடி துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை என்றார்.
No comments:
Post a Comment