(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பான பெயர் பட்டியலை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்றுடன் நிறைவடைகிறது. இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது. தாமதிக்காமல் பெயர் பட்டியல் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினாலும் குறித்த கட்சிக்கு அல்லது குழுவிற்கு உரியவாறு பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட தெரிவு தொடர்பான விபரங்கனை தேர்தல் முடிவடைந்தவுடனே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டியிருந்த போதிலும், தேர்தல் முடிவுற்று 23 நாட்கள் கடந்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பட்டியல் மற்றும் பெண் பிரதிநிதித்துவம் பற்றிய விபரங்களை மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கோ சமர்ப்பிக்கவில்லை.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு 2025.02.17 ஆம் திகதியன்று பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2025.06.02 ஆம் திகதியன்று உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென நியமிக்கப்பட்டுள்ளது.
விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரது கட்டளையின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட வேண்டியுள்ளதால் ஒவ்வொரு கட்சியும், குழுவும் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களையும் இன்று (2025.05.30 ) நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக உரிய உள்ளுராட்சி அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவல்களுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்துள்ளோம்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பெயர் பட்டியலை பூரணமாக ஒப்படைக்காத காரணத்தால் உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளின் உறுப்பினர்களின் பெயர்களை அத்தாட்சிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது.
பெயர் பட்டியலை வழங்குவதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது. ஆகவே தாமதிக்காமல் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment