அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்ட விவகாரத்தில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்படுகிறது : ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஷூரா சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 29, 2025

அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்ட விவகாரத்தில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்படுகிறது : ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஷூரா சபை

தற்­போ­துள்ள பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை இரத்துச் செய்வதைத் தவிர, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்­பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­திற்கு எந்­த­வித மக்கள் ஆணையும் கிடை­யாது என தேசிய ஷூரா சபை தெரிவித்துள்­ளது.

அத்­துடன், ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன் தாம் ஆட்­சிக்கு வந்தால் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை ஒழிப்­ப­தா­கவே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவும் அவ­ரது தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியும் ஆணைய­ளித்­தது. அவ்வாறு செய்­வ­தற்கே மக்கள் ஆணையை வழங்­கி­னார்கள். மாறாக, புதிய பயங்­க­ர­வாதச் சட்­டங்­களைக் கொண்­டு­வர மக்கள் ஆணை வழங்­க­வில்லை எனவும் ஷூரா சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது விடயம் தொடர்­பாக தேசிய ஷூரா சபை ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வுக்கு நேற்­றை­ய­தினம் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்­ளது. 

அதில் கடந்த 25 ஆண்­டு­களில் நிறை­வேற்று அதி­காரம் மற்றும் காவல்­து­றையின் விரி­வான அதி­கா­ரங்கள் கிடைக்­கு­மாறு போதுமான பல்­வேறு சட்­டங்கள் ஏற்­க­னவே இயற்­றப்­பட்­டுள்­ளமை பற்­றியும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாதம் முற்­றி­லு­மாக அழிக்­கப்­பட்டு பதி­னாறு ஆண்­டுகள் கடந்து, தற்­போது இங்கு எந்தவித பிரி­வி­னை­வா­தி­களோ பயங்­க­ர­வா­தி­களோ இல்­லாமல் நாடு சுமு­க­மாகச் செயற்­பட்டு வரும் நிலையில், பயங்­க­ர­வாதத் தடுப்பு தொடர்­பான புதிய சட்­டங்­க­ளுக்கு எந்த அவ­சி­யமும் கிடை­யாது எனவும் தேசிய ஷூரா சபை அக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு தேசிய ஷூரா சபை எழு­திய கடி­தத்தில் மேலும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தேசிய ஷூரா சபை (NSC) தேசிய அளவிலான முஸ்லிம் சமூக அமைப்­புக்­களை உள்­ள­டக்­கிய பொது சிவில் அமைப்­பாகும். இது பிர­பல சமூக ஆளு­மை­க­ளையும் உள்ளடக்­கி­ய­தாக அமை­கின்­றது. 2012 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்டு நாட்டின் பல இடங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொட­ரப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்த முஸ்லிம் விரோத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில், 2013 ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறு­வப்­பட்­டது.

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது சமீ­பத்­திய ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யும் என தெளி­வா­கவே வாக்குறுதியளித்­துள்­ளது. ஆனால் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டத்துக்கு பதி­லாக வேறொரு சட்டம் கொண்டு வரப்­படும் என தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலோ பிரச்­சா­ரங்­க­ளிலோ அறிக்­கை­க­ளிலோ தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ‘பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை இரத்துச் செய்­வது’ என்­பது தான் வாக்­கு­று­தியாய் அமைந்­ததே ஒழிய ‘அதற்குப் பதி­லாக புதிய சட்டம் கொண்டு வரு­வது’ என்று எங்­கேயும் குறிப்பிடப்­ப­ட­வில்லை.

1979 இல் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் இயற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து, தமக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் இந்தச் சட்­டத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள். இதுவே 1983 ஆம் ஆண்டு தமிழர் விரோதக் கல­வரம் உட்­பட தீவிரவாதத்தின் வளர்ச்­சிக்கு அமைந்த கார­ணங்­களுள் ஒன்­றாக அமைந்­தது. பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் வன்­மு­றையை ஒழிக்கவில்லை; மாறாக தீவி­ர­வா­தத்தைப் பெருக்கி, நாட்டை 30 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட காலம் நீண்ட போர் ஒன்றில் தள்­ளி­யது. இது நாட்டை பொரு­ளா­தார ரீதி­யாக சீர­ழித்­த­துடன் ஆயுத உற்­பத்தி நாடு­க­ளுக்கு பெரும் வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுத்­தது.

2009 மே மாதம் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­ட­மா­னது முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதிராக உரு­வான வெறுப்புப் பிர­சா­ரங்­களைக் கட்­டுப்­ப­டுத்த பயன்ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்­கு­தல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. 2018ம் ஆண்டில் மட்டும் 25க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தாக்கப்பட்­டன. 21.04.2019ல் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவும் ஜனாதிபதி ஆணைக்­கு­ழுவும் ஏழு பெரும்­பான்­மை­வாத தீவி­ர­வாத அமைப்­பு­களின் நட­வ­டிக்­கை­களும் ஈஸ்டர் தாக்­கு­த­லுக்கு காரணமாக அமைந்­த­மையை சுட்­டிக்­காட்­டின.

இத்­த­கைய வர­லாற்றுப் பின்­ன­ணியில், நாம் தேசிய மக்கள் சக்தியிடம் அதன் வாக்­கு­று­தியை மதித்து பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்­யு­மாறும், அச்­சட்­டத்­துக்குப் பதி­லாக வேறு எந்த சட்­டத்­தையும் கொண்­டு­வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

கடந்த 25 ஆண்­டு­க­ளுக்­குள்ளால் ஏற்­க­னவே பல தட­வைகள் புதிய பல்­வேறு பாது­காப்புச் சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இச்சட்டங்கள் நிர்­வாக அதி­கா­ரி­க­ளுக்கும் காவல்­து­றைக்கும் பரந்த அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்­ளதால் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் உரு­வாக்­கு­வது தேவை­யற்­றது என்­ப­தனை வலியுறுத்துகிறோம்.

இலங்­கையில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு 16 ஆண்­டுகள் நிறைவடைந்­துள்­ளன. தற்­போது தீவி­ர­வா­தத்­திற்­கான எந்த ஆபத்தும் இல்­லாத. நிலையில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் நடை­மு­றையில் இருப்­ப­தா­னது எமது நாட்டைப் பற்­றிய ஒரு எதிர்மறை­யான அபிப்­பி­ரா­யத்தை உல­க­ளவில் ஏற்­ப­டுத்தும். அதன் விளை­வாக சுற்­றுலாத் துறை, வெளி­நாட்டு முத­லீ­டுகள், மற்றும் பொரு­ளா­தார முன்­னேற்­றங்கள் பாதிப்­ப­டையும் என நம்­பு­கிறோம்.

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கொடூ­ர­மான அம்­சங்­களை மாறுபட்ட பெயரில் மீண்டும் கொண்­டு­வர சில வெளி­நாட்டு தரப்புகள் அழுத்தம் கொடுக்­கின்­றன. இதன் நோக்கம், இலங்கை இன்னும் தீவி­ர­வாத ஆபத்­துக்­குட்­பட்­ட­தா­கவே இருக்­கி­றது என்ற பிம்பத்தை உரு­வாக்கி, நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்டை தடுப்பதா­கவும், இந்து சமுத்­தி­ரத்தில் நிலவும் பலம் பொருந்­திய நாடுக­ளுக்­கி­டை­யி­லான மோதல்களில் இலங்கையை அடிமைத்தனமான நிலைக்கு கொண்டு செல்வதாகவும் இருக்கலாம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்கும் நோக்குடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் நியமித்துள்ள குழுவில் 90% அதிகமானவர்களாக அரச அதிகாரிகளை மட்டும் நியமிக்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றதாக உள்ளது. இது அரசியலமைப்பின் சுயாதீனத்துக்கும், நீதிக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் முரணானதொரு விடயமாகும். இக்குழுவில் சுயாதீனமான, பல்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுள் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இல்லாமை ஏமாற்றம் தருவதாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment