பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
புத்திஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு விரிவான பரிந்துரைகளை கூட்டாக சமர்ப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்துச் செய்யுமாறும், மனித உரிமைகள், அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இல. 48, 1979 ஐ மாற்றுவதற்கான புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகள்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணம், தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு மாற்றியமைக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பை முன்மொழிகிறது.
இந்த பரிந்துரைகளை பேராசிரியர் (டாக்டர்) எம்.எஸ்.எம். ஷிஃபா (BUMS, MD, PhD, LLB, சட்டத்தரணி), SEDA, ரி.கே. ஆசூர், சட்டத்தரணி, ஏ.ஜே., முஹம்மது அர்ஷத், LLB, ரிஸ்வான் உவைஸ், சட்டத்தரணி, நிஸ்வார்தீன் பாத்திமா நிஷ்ரா, சட்டத்தரணி, மற்றும் அப்துல் அஸீஸ் மொஹமட் அனாஸ் (ACA, MFE, LLB UK, FMAAT, ACPM, MCIM, MSLEA) ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த முன்மொழிவுகளில்,
PTA இன் வரலாற்றுத் தவறான பயன்பாடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது காரணமாக அதனை உடனடியாக ரத்து செய்தல்.
அமைதியான கருத்து வேறுபாடுகள், பத்திரிகை, மத நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, பயங்கரவாதத்தின் ஒரு குறுகிய மற்றும் துல்லியமான வரையறை.
கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் மீது நீதித்துறை மேற்பார்வை, அத்துடன் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன் அதிகபட்சமாக 48 மணிநேர தடுப்புக்காவல் காலம்.
சித்திரவதைக்கு தடை, மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்புக்காவலில் CCTV கண்காணிப்பு உட்பட கட்டாயப்படுத்தப்பட்ட வாக்குமூலங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீனமான மேற்பார்வைக் குழு.
அரசியல்மயமாக்கப்பட்ட de-radicalization திட்டங்களை விலக்குதல் மற்றும் கலாசார மற்றும் மத வெளிப்பாடுகளைப் பாதுகாத்தல்.
சட்டத்திற்கு ஒரு காலக்கெடு மற்றும் கட்டாய வருடாந்திர நாடாளுமன்ற ஆய்வு.
இன்னும் இதுபோன்ற பல்வேறு சட்டத்தின் நுணுக்கமான மதிப்பாய்வுடன் கூடிய முன்மொழிவுகள் உள்ளிட்ட விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வரைவுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது ஈடுபாட்டிற்கு இந்தக் குழு அழைப்பு விடுக்கிறது. மேலும், முன்மொழியப்பட்ட சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
“இது ஒரு சட்டத்தை சீர்திருத்துவது மட்டுமல்ல. இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவையும் ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகும்” என்று அங்கீகரித்தவர்கள் சார்பாகப் பேசிய பேராசிரியர் ஷிஃபா கூறினார். “ஒரு மனிதாபிமான மற்றும் பயனுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உரிமைகளில் வேரூன்றியிருக்க வேண்டும், அடக்குமுறையில் அல்ல”.
இந்தச் சமர்ப்பிப்பு, தேசிய பாதுகாப்பிற்கான ஒரு சமநிலையான, சட்டபூர்வமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் இலங்கை முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்வதற்கான ஒரு முனைப்பான மற்றும் கொள்கை ரீதியான பதிலைக் குறிக்கிறது.
Vidivelli
No comments:
Post a Comment