நாட்டில் பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் அரசாங்கமும் இருக்கிறது. அதனால் ஊழலை ஒழிப்பதற்கு வந்த அரசாங்கம் உப்பு மாபியா தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி(கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் நிலையில் நேற்றுமுன்தினம் இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதி செய்வதற்கு முன்னரே அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளது. அதன் பிறகே தனியார் துறைக்கு உப்பு இறக்குதிக்கு அனுமதி வழங்கி இருப்பதை தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் தெளிவாகிறது.
நாட்டில் தற்போது உப்பு மாபியா ஒன்று உருவாகி இருக்கிறது. இதற்காக அரசாங்கத்துக்கு யாராவது உந்துசக்தியாக இருக்கிறார்களா? இது தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பாரியதொரு ஆணையை வழங்கி இருக்கின்றனர்.
ஒருசில தனியார் நிறுவனங்களின் முதலாளிமார், புத்தளத்தில் பங்குகளை பெற்றுக்கொண்டு, அதில் பணிப்பாளர் சபையிலும் இருக்கின்றனர். புத்தளம் இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதில் சரிபாதி உப்பு உற்பத்தி செய்யப்படும் பிரதேசமாகும். ஆனால் புத்தளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இன்று சந்தையில் இல்லை. இது யாராவது திட்டமிட்டு செய்கிறார்களா என்பது தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.
இன்று 130 ரூபாவுக்கு இருந்த உப்பு பெக்கெட் ஒன்றின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பு பெக்கெட் ஒன்றை 150 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மக்கள் மீது பாரிய சுமையை சுமத்தியுள்ளதன் பின்னணியில் பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது. நாட்டுக்குள் உப்பு மாபியா ஏற்படுவதற்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.
உப்பு உற்பத்தி செய்யும் புத்தளம் மக்கள் உப்பு இறக்குமதி செய்யுமாறு டிசம்பர் மாதத்தில் இருந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் உப்பு தட்டுப்பாடு அதிகரிக்கும்வரை இடமளித்து வந்தது. இதுவே அரிசி இறக்குமதியிலும் இடம்பெற்றது.
நாட்டில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சரியாக அரைவாசி புத்தளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அங்கு உற்பத்தி குறையும்போது அது தொடர்பில் ஆலோசனை தெரிவிப்பதற்குகூட அங்கு ஒரு அரச நிறுவனம் கூட இல்லை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்கூட்டி நடவடிக்கை எடுக்க தவறியதாலே இன்று பாரியளவில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நாட்டை சுற்றி கடல் இருந்தும் உப்பு இல்லாமல் போவது என்பது பாரிய பேரழிவாகும்.
மேலும் புத்தளத்தில் உப்பு உற்பத்தி மற்றும் வியாபார நடவடிக்கைகளில் இருந்து தங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சில காணிகளை அரசாங்கம் அபகரித்துக் கொண்டுள்ளதாகவும், தாங்கள் நீண்ட காலமாக இருந்துவந்த இந்த காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் உப்பளசங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன அடிப்படையிலும் இந்த விடயங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. இன ரீதியில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது என்று பேசுகின்ற அரசாங்கம், புத்தளம் பிரதேச செயலகத்தின் ஊடாக அரசாங்கம் கையக்கடு்த்தி இருக்கும் காணியின் உரித்து பத்திரத்தை உப்பளசங்க உறுப்பினர்களுக்கு கொடுப்பதன் மூலம் அந்த காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும்.
அத்துடன் புத்தளத்தில் உப்பளங்களில் இருக்கின்ற உப்புத்தன்மை குறைந்து வருகிறது. அங்கிருக்கின்ற களப்புகளில் வேறு விதமான விடயங்கள் கலப்படுவதன் மூலம் இந்த நிலை ஏற்பட்டு வருகிறது. முன்பு ஒரு தொடக்கம் 3 சதவீதம் வரை இருந்த உப்புத்தன்மை தற்போது 0.5 முதல் ஒரு சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
அதனாலே தற்போது உப்பு உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள உப்பள உரிமையாளர்கள் ஏற்கனவே அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றபோது, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு புத்தளத்தில் அதிகாரமுள்ள எவரும் இல்லை.
இவ்வாறு பல பிரச்சினைகள் புத்தளத்தில் காணப்படுகின்றன. அதனால் இந்த உப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அதேபோன்று தற்போது ஏற்பட்டுள்ள உப்பு மாபியாவில் அரசாங்கத்தின் அனுசரணையில் ஏதாவது நடக்கிறதா என பார்க்க வேண்டும்.
அதேபோன்று உப்பு இறக்குமதியில் இடம்பெற்றுவரும் ஊழல் நடவடிக்கைகளில் இருக்கும் கம்பனிகள் தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். ஊழலை ஒழிப்பதற்கு வந்த இந்த அரசாங்கம் உப்பு தொடர்பான ஊழல் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment