பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைக்க கலந்துரையாடி வருகிறோம் : முழு இலங்கை மக்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தியைக் கொடுத்துள்ளனர் - வஜிர அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைக்க கலந்துரையாடி வருகிறோம் : முழு இலங்கை மக்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தியைக் கொடுத்துள்ளனர் - வஜிர அபேவர்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் சில தினங்களில் அது தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 45 இலட்சத்தி 3ஆயிரத்தி 930 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக 59 இலட்சத்தி 6 ஆயிரத்தி 880 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, அவர் 1.1 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார், மேலும் பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அவர் 2.3 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, ஜேஆர். ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று, இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களில் அனைத்து அதிகாரங்களையும் பெற்றார். பின்னர், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரும் அவ்வாறே வெற்றி பெற்றுக் கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் 2001 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, இலங்கை முழுவதும் சென்று அத்தனகல்லா உட்பட உள்ளூராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற பாடுபட்டார்.

தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, வரலாற்றுத் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

முழு இலங்கை மக்களும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையான செய்தியைக் கொடுத்துள்ளனர் என்றே நினைக்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் 50 வீத வாக்குகளைப் பெற அரசாங்கம் தவறியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பொய்கள் அல்லது தவறான தகவல்களை சமூகமயமாக்குவதன் இறுதி விளைவு என்றே நான் நினைக்கிறேன். எனவே, கூட்டு எதிர்க்கட்சி ஒற்றுமையாகச் செயல்பட்டுள்ளது. அவர்களால் அதிகமான சபைகளில் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற முடிந்துள்ளன.

எனவே எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் சில தினங்களில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம் என்றார்.

No comments:

Post a Comment