நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 14 ஆம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துக்களின் காரணமாக சுமார் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நாடு தழுவிய ரீதியில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் வரையான காலப்பகுதியில் 1,842 பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் குறித்த விபத்துகளில் சிக்கி சுமார் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர சிறியளவிலான சேதம் மற்றும் பாதிப்புகளுடன் கூடிய 902 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கவனக் குறைவாகவும் அதிக வேகத்துடனும் வாகனம் செலுத்துதல், மது போதையில் வாகனம் செலுத்துதல், உரிய காலப்பகுதியில் வாகனங்களை பழுது பார்க்காமை மற்றும் வாகனம் செலுத்தும்போது சாரதிகளுக்கு ஏற்படும் தூக்க கலக்கம் போன்ற காரணங்களால் இவ்வாறான விபத்துக்கள் சம்பாதிப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
ஆகையால் தூர பயணங்கள் செல்லும் சாரதிகள் முறையாக நித்திரை கொண்டு வாகனம் செலுத்துவதுடன் மேலதிக சாரதி ஒருவரையும் பயணத்தின்போது இணைத்துக் கொள்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.
வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்காக செல்வோர் பழக்கமில்லாத புதிய வீதிகளில் வாகனம் செலுத்துவது அவதானம் மிக்கது. குறித்த வீதி பற்றிய அனுபவம் உடைய சாரதி ஒருவர் இருப்பதே நல்லது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேற்படி திட்டத்துக்கமைய சாரதிகளிடையே விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment