இன்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகாத ரணில் : திங்கட்கிழமை முன்னிலையாவதாக சட்டத்தரணி மூலம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 25, 2025

இன்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகாத ரணில் : திங்கட்கிழமை முன்னிலையாவதாக சட்டத்தரணி மூலம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினமும் (25) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பாக, குறித்த ஆணைக்குழுவில் ஆஜராவார் என்று அவரது சட்டத்தரணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து குறித்து, ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலில் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தாம் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது சட்டத்தரணிகள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதைக் காரணம் காட்டி வேறு திகதியொன்றைக் கோரியிருந்தார்.

அதன்படி, ஆணைக்குழு அவருக்கு புதிய திகதியை வழங்கியதுடன், இன்று வெள்ளிக்கிழமை (25) மு.ப. 9.30 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது.

தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான நிலையான வைப்புத்தொகையை, உரிய முறையில் மீளப் பெற்றதாக கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சாமர எம்.பி. கைது செய்யப்பட்டிருப்பது, பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததற்கான பதிலடியா எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான ரூ. 1 மில்லியன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது. ஆயினும் மற்றுமொரு வழக்கில் பதுளை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) குற்றச்சாட்டுகளின்படி, ஊவா மாகாணத்தில் உள்ள முன்பள்ளி சிறுவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்குவதற்காக, மூன்று அரச வங்கிகளிடமிருந்து சாமர சம்பத் தசநாயக்க நிதி கோரியுள்ளார்.

இரண்டு வங்கிகள் அவருக்கு ரூ. 1 மில்லியன் மற்றும் ரூ. 2.5 மில்லியனை வழங்கிய நிலையில், அவற்றை அவர் தனது தனிப்பட்ட அறக்கட்டளை கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

இருப்பினும், மூன்றாவது வங்கி நிதி வழங்க மறுத்ததன் காரணமாக, ஊவா மாகாண சபையின் நிலையான வைப்புத் தொகையை அந்த வங்கியிலிருந்து மீளப் பெற்றதன் மூலம் பழிவாங்கியதாகக் கூறப்படுகிறது.

அவரது இந்த செயலின் காரணமாக அரசாங்கத்திற்கு ரூ. 17.3 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றும்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

No comments:

Post a Comment