மன்னார் நீதிமன்றப் பகுதியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை, சட்டத்தரணிபோல வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாம் சர்வதேசத்துக்குச் சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். கடந்த காலங்களை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின், முதலில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
‘தேசிய பாதுகாப்புக்கு இம்முறை குறைவான நிதியையே ஒதுக்கியுள்ளோம். அனைவரும் சுதந்திரமாக வீதியில் செல்லலாம்’ என அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகின்றார். நடைமுறையில் நிலைமை அவ்வாறாக உள்ளதா?.
நேற்று (நேற்று முன்தினம்) இரவு மித்தெனிய பகுதியில் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நீதிமன்றத்துக்குள் நேற்று படுகொலை நடக்கிறது. நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதியின் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுகிறது.
இவர்கள் பாதாள குழுக்களாக இருக்கலாம். அவர்களின் ஒழுக்கம் பற்றி நாம் பேசவில்லை. நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதே பாரதூரமான விடயம்.
பாதுகாப்பு பிரச்சினையில்லை அனைவரும் எங்கும் செல்லலாம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மறுபுறம் பட்டப்பகலில் மனிதப் படுகொலைகள் இடம்பெறுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது.
மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றார் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். ஆகவே கடந்த காலங்களை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்றார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment