மேற்குக் கரை மற்றும் காசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் இஸ்ரேலின் இரு தீவிர வலதுசாரி அமைச்சர்களான இடாமர் பென் கிவிர் மற்றும் பெசலல் ஸ்மொட்ரிச் ஆகியோர் மீது பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை விதித்துள்ளன.
பிரிட்டனுடன் இணைந்து கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சரான பென் கிவிர் மற்றும் நிதி அமைச்சரான ஸ்மொட்ரிச் இருவரது சொத்துகளையும் முடக்கி அவர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன. இந்த இருவரும் ஆகிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்த குடியேறிகளாவர்.
இந்தத் தடை இஸ்ரேலின் நட்பு நாடுகள் அதற்கு எதிராக மேற்கொண்டிருக்கும் அரிதான நடவடிக்கையாக பார்க்கப்படுவதோடு, இதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ, X சமூக தளத்தில் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
‘ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு… யார் உண்மையான எதிரி என்பதை மறக்கக்கூடாது என எமது நட்பு நாடுகளுக்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்ட ருபியோ, தடைகளை வாபஸ் பெறும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
மற்ற நான்கு நாடுகளுடன் இணைந்து கூட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லமி, “பென் கிவிர் மற்றும் ஸ்பொட்ரிச் இருவரும் கடுமையான வன்முறைகளை தூண்டி பலஸ்தீனர்களின் மனித உரிமைகளை மோசமாக மீறியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. அதனாலேயே இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் மீது நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.
ஹெப்ரூன் குன்றுகளில் புதிய மேற்குக் கரை யூதக் குடியேற்றம் ஒன்றை திறந்துவைத்து உரையாற்றிய ஸ்மொட்ரிச், பிரிட்டனின் நடவடிக்கை ‘அவமதிப்பானது’ என்று தெரிவித்தார். ‘நாம் உறுதியாக இருக்கிறோம் இறைவனின் விருப்புடன் நாம் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொள்வோம்’ என்றார்.
இந்த இரு அமைச்சர்களும் இஸ்ரேலிய கூட்டணி அரசின் தீவிர தேசியவாத கட்சிகளின் தலைவர்களாவர். இந்த கூட்டணி அரசு பாராளுமன்றத்தில் எட்டு ஆசனங்களை பெரும்பான்மையாக வைத்திருப்பதோடு இதில் பென் கிவிரின் யூத சக்தி கட்சி ஆறு ஆசனங்களையும், ஸ்மொட்ரிச்சின் மத சியொனிச கட்சி ஏழு ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து நாடுகளின் இந்த தடைக்கு மத்தியில் அமெரிக்கா முன்னணி பலஸ்தீன மனித உரிமைகள் அமைப்பு உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் ஐந்து தொண்டு அமைப்புகள் மீது தடை விதித்துள்ளது. இந்த அமைப்புகள் ஹமாஸ் உட்பட பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும்படி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடந்த மாதம் அழுத்தம் கொடுத்திருந்தனர். காசா முற்றுகை அங்கு தீவிர பஞ்ச நிலையை ஏற்படுத்தும் என்று ஐ.நா. உட்பட சர்வதேச தொண்டு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
எனினும் காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு உதவிக்குக் காத்திருந்தவர்கள் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
மத்திய காசாவின் நட்சரிம் சோதனைச்சாவடிக்கு அருகே உள்ள உதவி விநியோக தளத்திலேயே இஸ்ரேலிய படை நேற்றுக் காலை தாக்குதல் நடத்தியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவில் முன்னெடுக்கப்படும் காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோகத் தளத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இவ்வாறாக உதவித் தளங்களில் பட்டினியுடன் உதவி பெற வரும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 163 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 1,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவுடைய இந்த அமைப்பின் ஊடாக உதவிகளை விநியோகிப்பதை ஐ.நா. மற்றும் ஏனைய பிரதான தொண்டு அமைப்புகள் நிராகரித்து வருகின்றன.
இந்த சர்ச்சைக்குரிய அமைப்பு ஆயுதம் ஏந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் உதவியுடனேயே இந்த உதவி விநியோகத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment