(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் இதுவரையில் அதற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீ நாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பாதுகாப்பு என்பது தற்போது பிரச்சினையாகியுள்ளது. அந்தளவுக்கு நாட்டில் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மைக்காலமாக பல அசௌகரியமான சம்பவங்கள் நேர்ந்துள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் பலமுறை சபாநாயகர் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்திருந்தபோதும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு சபாநாயகர் பொறுப்புக்கூற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பை வழங்குவதை விட அதற்கு முன்னர் பாதுகாப்பு வழங்குவது சிறந்தது.
10ஆவது பாராளுமன்றம் கூடி 100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment