வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கிற்கும் போதியளவு நிதி : சரியாகப் புரியாதவர்களே குறை கூறுகின்றனர் - பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கிற்கும் போதியளவு நிதி : சரியாகப் புரியாதவர்களே குறை கூறுகின்றனர் - பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை புரியாதவர்களே கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வரவு செலவு திட்டத்தை சரியாக வாசித்து விளங்காதவர்களே குறைகூறி வருகின்றனர் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வரவு செலவு திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கும் மலையகத்துக்கும் அள்ளி வழங்கிய அரசு கிழக்கு மாகாணத்தை புறக்கணித்துள்ளதாக பலரும் தெரிவித்திருந்தனர். இந்த ஆதங்கத்தை தெரிவிக்கின்றவர்கள், அவர்களின் அமைச்சர்கள் பல வருடங்களாக அமைச்சுப் பதவியில் இருந்தபோது கிழக்கு மாகாணத்துக்கு எத்தகைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார்கள் என கேட்கிறேன்.

குறிப்பாக இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக இந்த நாட்டிலே இருக்கும் அனைவரையும் உள்ளடக்கி அனைவருக்குமான வரவு செலவு திட்டமாக இது அமைந்திருக்கிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் மலையக மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளதை இவர்கள் அனுமதிக்கின்றார்களா? என கேட்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவரையும் இலங்கையர்களாக பார்க்கின்ற இந்த அரசு, அனைவருக்குமான வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்த வரவு செலவு திட்டத்தை விமர்சிப்பவர்கள் வரவு செலவு திட்ட அறிக்கையை சரியாக வாசித்து விளங்கவில்லை. இவர்கள் இதனை சரியாக வாசித்து விளங்கி இருந்தால், கிழக்கு மாகாணத்துக்கு அரசாங்கம் எந்தளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருப்பார்கள். குறிப்பாக கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரம் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எனவே இந்த நாட்டின் அழிவுக்கு பிரதான காரணம் ஊழல் மோசடி, வீண் விரயம் மற்றும் அசமந்தப்போக்காகும். அதனால் இந்த வரவு செலவு திட்டம் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலஞ்சத்தை ஒழித்து மோசடியை இல்லாதொழிக்க முடியுமாகி இருக்கிறது. இனவாதத்தை தூண்டி குறைகூறி வருகின்றவர்களுக்கு சிறந்த பாடத்தை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் வரவு செலவு திட்டம் நாட்டு மக்கள் அனைவரையும் கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட வேண்டும். அதேபோன்று வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும்போது நாட்டின் தற்போதைய அரசியல், சமூக, கலாசார நிலைமையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு மாற்றப்படும் வகையில் அமைய வேண்டும்.

ஆனால் எமது நாடு சுதந்திரம் அடையும்போது இருந்த விதத்தையும் தற்போதுள்ள நிலையையைும் திரும்பிப்பார்த்தால் எமக்கு எமது நாட்டின் நிலைமையை புரிந்துகொள்ள முடியும்.

கடந்த கால வரவு செலவு திட்டத்தின் மூலம் அந்த ஆட்சியாளர்கள் தனது குடும்பம், தன்னை சுற்றியுள்ள மாபியா வியாபாரிகளை மகிழ்ச்சிப்படுத்தி இருந்தனர். இதன் மூலம் அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினர். அதுமாத்திரமல்லாது அன்றைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் மருந்து பொருட்களின் மூலமும் சூரையாடினர் என்றார்.

No comments:

Post a Comment