அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானமில்லை : குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தொடர்பிலேயே அவதானம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானமில்லை : குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தொடர்பிலேயே அவதானம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. பொருளாதார நிலைமைக்கமைய எவ்வாறு குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவது என்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (20) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் தேசிய வர்த்தகர்களிடமிருந்து அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தேசிய தேவைப்பாட்டுக்கமைய நியாயமான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முன்மொழிவையே நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் ஊடாக மக்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய வகையில் மின்னுற்பத்தியை முன்னெடுக்க முடியும்.

மின்னுற்பத்தி செலவுகளைக் குறைப்பது தொடர்பிலேயே நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். அமைச்சரவையில் அதானி செயற்றிட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மின் அலகொன்றுக்கான விலையை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளையே நாம் முன்னெடுத்திருந்தோம்.

இந்தியாவுக்கு வழங்கும் விலையிலேனும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தோம். எவ்வாறிருப்பினும் அதானி நிறுவனம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதுவே அவர்கள் தமது செயற்றிட்டத்தை நிறுத்துவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. வேறொரு நிறுவனம் இதனை விட குறைந்த விலையில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.

எமது பொருளாதார நிலைமைக்கமைய எவ்வாறு குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவது என்பது தொடர்பிலேயே நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். அதானி வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டு சகல முதலீட்டாளர்களும் வெளியேறுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.

மேலும் பல முதலீட்டாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment