பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடை : அவமதிக்கும் வகையில் வசைபாடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுங்கள் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடை : அவமதிக்கும் வகையில் வசைபாடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுங்கள் - இராதாகிருஸ்ணன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடையாக உள்ளன. இந்த தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் மலையக தலைவர்களை அவமதிக்கும் வகையில் வசைபாடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையிலும், அரசியல் நிலையில் நாங்கள் இல்லை. நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றக்கொள்ளக் கூடியது. ஏனெனில் வருமான அடிப்படையில் மக்கள் மத்தியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதானி நிறுவனம் இலங்கையில் செயற்படுத்த தீர்மானித்திருந்த முதலீட்டுத் திட்டத்தை இரத்துச் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இருக்கும் முதலீடுகளை தக்கவைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் 1700 ரூபாய் சம்பளம் வழங்குவதாக குறிப்பிட்டார். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமடையவில்லை.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்ட கம்பனிகளே தடையாக செயற்படுகின்றன. ஆகவே சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் வழங்குதாக குறிப்பிட்டிருந்தது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புக்கு 4.2 பில்லியன் ரூபாய், மலையக இளைஞர் அபிவிருத்திக்கு 2.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு இந்திய அரசின் கீழ் கிடைக்கப் பெறுகிறதா? அல்லது அரசாங்கம் தனித்து ஒதுக்கியுள்ளதா? என்பதை ஆராய வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் குறித்து ஒரு சில விடயங்களை குறிப்பிட வேண்டும். மலையக தலைவர்களை வசைபாடி, அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆளும் தரப்பில் உள்ள பெருந்தோட்ட பிரதிநிதிகள் மலையக மக்களை அவமானப்படுத்தி, மக்களின் அனுதாபங்களைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

கடந்த கால மலையக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பாரிய போராட்டங்களின் பின்னர்தான் மலையக தலைவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைத்தது. இயலுமான வகையில் மலையகத்துக்கு அபிவிருத்தி செய்துள்ளோம். உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். ஆகவே தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை தற்போதும் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment