முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் : தேங்காய் தட்டுப்பாட்டில் மனித, பௌதீக காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன - எஸ்.பி. திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் : தேங்காய் தட்டுப்பாட்டில் மனித, பௌதீக காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன - எஸ்.பி. திசாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும். நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். மொத்த நுகர்வுக்கு தேவையான அளவில் தேசிய மட்டத்தில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பெரும்பாலான தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. தென்னை தோப்புக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு அதிகளவான தெங்கு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மனித காரணிகளுடன் பௌதீக காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றி தற்போது பேசப்படுகிறது. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடுகளை அவர்கள் தமது விருப்பத்துக்கு அமைய பெருப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை அவர்கள் அரச செலவில் தமது விருப்பத்துக்கு அமைய புதுப்பித்துள்ளார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்த சந்தர்ப்பத்திலும் அந்த வீட்டை புனரமைப்பதற்கு பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆகவே இது முறையற்றதொரு செயற்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment