இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென் ஹொங், சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது என குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மேலும் உரையாற்றுகையில், 2025 கல்வியாண்டின் நன்கொடையாகவே இது காணப்படுகிறது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எமது ஆழமான நட்பு, நீண்டகால பங்காளர்களுக்கான சான்றாக இது காணப்படுகிறது.
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது. எமது இரு நாடுகளுக்கும் பரஸ்பர மரியாதை, புரிதல், ஒத்துழைப்பு தொடர்பாக வரலாற்றை கொண்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment