தபால் சேவையை நவீன மயப்படுத்த தீர்மானம் : புதிய தபால் நிலையங்கள் இனி நிறுவப்படாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 25, 2024

தபால் சேவையை நவீன மயப்படுத்த தீர்மானம் : புதிய தபால் நிலையங்கள் இனி நிறுவப்படாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(செ.சுபதர்ஷனி)

பன்முக சேவைகளை மக்களுக்கு வழங்கும் இலங்கை தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தபால் திணைக்களம் முறையான தொலைநோக்கு பார்வையுடனும் அதற்குரிய திட்டங்களுடனும் செயற்படுவதை காண கூடியதாக உள்ளது.

தற்போது தபால் சேவையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சேவையை நவீனமயப்படுத்தி தேசிய சேவையாக தரம் உயர்த்துவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

விசேடமாக அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி புதிய தபால் நிலையங்களை நிறுவும் செயற்பாடு இனி ஒருபோதும் இடம்பெறாது.

தபால் சேவை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். உரிய புரிதலுடன் அதிகாரிகளும் இத்திட்டத்தை செயற்படுத்துவதும் அவசியம்.

குறிப்பாக சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி அதிக இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு உதவிகளை பெறும் நோக்கில் திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம். வருமானம் ஈட்டக்கூடிய பல துறைகளை தபால் திணைக்களம் கொண்டுள்ளது.

ஆகையால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

தபால் சேவையில் உள்ள ஒரு சில துறைகள் தவற விடப்பட்டும், கவனத்தில் கொள்ளப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே எதிர்வரும் நாட்களில் தபால் சேவையை மக்கள் விரும்பத்தக்க வகையில் புதிய மாற்றங்களுடன் கூடிய பன்முக சேவைகளை வழங்குவதுடன், இலங்கை தபால் திணைக்களத்தின் வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மையான தபால் சேவையை உருவாக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment