வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப்புரிந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (19) அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
கூட்டத்துக்கு தலைமையேற்று ஆரம்ப உரையாற்றிய ஆளுநர், விஞ்ஞானப் பிரிவை உயர் தரத்தில் தெரிவு செய்யும் மாணவர்கள் சிலர், தமது பிரதேச பாடசாலைகளில் அந்தக் கற்கை நெறியை படிப்பிப்பதற்குரிய ஆசிரியர்கள் இல்லாமல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து படிக்கின்றனர்.
இவ்வாறு படிக்கும் மாணவர்களில் சிலர், கல்வியை ஒழுங்காகத் தொடராது தவறான வழியில் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்தால், அதைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
பாடசாலையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ எந்தவொரு கட்டணமும் அறவிடக்கூடாது. அரசாங்கத்தின் சுற்றறிக்கையும் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கட்டண அறவீடுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சின் செயலர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பணித்தார்.
பாடசாலைகளுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் அவற்றில் பல இடங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கின்றது. இதைக் கண்காணிப்பதற்கு இறுக்கமான பொறிமுறை உடனடியாக உருவாக்கப்படவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள் பலர் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றால் அவர்களை அதிகாரிகள் சந்திப்பதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறு செயற்படக்கூடாது. அவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே ஆசிரியர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும்போது திறமையான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வடக்கு மாகாணம் 2030 ஆம் ஆண்டு கல்வியில் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும்.
அதை நோக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேறிச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களைப்போன்று கல்வித்துறையில் இனி அரசியல் தலையீடுகள் இருக்காது என ஜனாதிபதி அவர்களும் உறுதியளித்திருக்கின்றார்.
எனவே அதிகாரிகள் துணிந்து பணியாற்ற முடியும். கடந்த காலங்களில் அதிகாரிகள் பழிவாங்கபட்ட சம்பவங்களும் இனி நடக்காது. எனவே மக்கள் நம்பும் வகையில் அரச அதிகாரிகளின் சேவைகள் இருக்க வேண்டும் என்றார் ஆளுநர்.
No comments:
Post a Comment