சட்டவிரோதமாக துப்பாக்கி உற்பத்தி செய்த சந்தேகநபர் (63) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாத்தறை பிரிவு குற்ற விசாரணைப் பணிமனை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, கடந்த புதன்கிழமை (23) பிற்பகல் மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலட்டுவ பகுதியில், சட்டவிரோதமாக ரிவால்வர் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் தளமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று 9 மில்லி மீட்டர் வகை தோட்டாக்கள் 5, வெற்றுத் தோட்டா ஒன்று, வெல்டிங் உபகரணம் ஒன்று உள்ளிட்ட உபகரணங்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 வயதுடைய, பாலட்டுவ, மாலிம்பட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இவ்வாறு தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து, அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இவ்வாறு விற்பனை செய்த 2 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவரை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 47 மற்றும் 54 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment