மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதத்துக்கமைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மோப்ப நாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக பொலிஸாருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதோரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ தினமான இரவு உடனடியாக பொலிஸார் நீதிமன்ற பதிவாளர் மற்றும் நீதவானுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் விசேட பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் அதிகாலை 5 மணி தொடக்கம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் சகிதம் கட்டிடப் பகுதியைச் சுற்றி வெடிகுண்டைத் தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையினை காலை 8 மணி வரை மேற்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட ஸஹ்ரான் காசிமின் ஐ.எஸ்.ஐ.எஸ். என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment