(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதியாகும். அதனாலே தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கிறார். கருத்துக்கணிப்புகளில் ரணில் விக்ரமசிங்க முன்னணியில் இருக்கிறார். படிப்படியாக முன்னேறிவரும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்ப முடியாமல் போகும். அதனால் மக்கள் கடந்த காலத்தில் ஏமாந்தது போன்று இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குளியாபிடிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை தொங்கு பாலத்தில் சென்றுதான் முன்னேற்ற வேண்டியநிலை இருந்தபோது, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்துகொண்டு நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொங்கு பாலத்தை தற்போது கடந்துள்ளார். தொங்கு பாலத்தை கடந்த பின்னர் தற்போது பலரும் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு வழங்குமாறு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எவ்வாறான கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்து, அன்று மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டங்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார்.
தற்போது நாட்டை அபிவிருத்தி செய்து, எமது கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.
அத்துடன் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனால் ரணில் விக்ரமசிங்கவை சுயாதீன வேட்பாளராக களமிறக்கி அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அந்த கட்சியின் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கிறது. அதனால் வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று எந்த பயனும் இல்லை.
அதேநேரம் இந்தமுறை தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக நாங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டாேம். அந்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது. நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், கட்டியெழுப்ப முடியாமல் போகும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
இந்த முறை ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டாலும் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் நாங்கள் எமது சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கான பலத்தை இந்த தேர்தலில் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்க தற்போது மக்கள் வீதிக்கிறங்க ஆரம்பித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதி என்தாலே அவர் போட்டியிட முன்வந்திருக்கிறார். நாங்கள் இன்னும் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கருத்துக்கணிப்புகளில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைவிட ரணில் விக்ரமசிங்க பல மடங்கு முன்னணியில் இருக்கிறார் என்றார்.
No comments:
Post a Comment