“2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, இருபது இலட்சம் பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தபோது, எதிர்க்கட்சியின் சில குழுக்கள் அந்தப் பிரேரணையை அலட்சியப்படுத்தின. ஆனால் ஜனாதிபதி அப்போது சிரித்துக் கொண்டே உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எமக்குப் பணிப்புரை விடுத்தார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா அல்லது அதற்கும் குறைவான வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து வீடுகளுக்காகவும் 150,000 ரூபாவினை செலுத்தி முடித்திருப்போர் மற்றும் இதுவரையில் அந்த தொகையினை செலுத்தாமல் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையை செலுத்தி முடிப்போர் உள்ளடங்களாக 50,000 பயனாளி குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் முழுமையான வீட்டு உரிமை வழங்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 1070 பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரங்களை வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
மேலும் உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்று உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உரிமைப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்க்க, அறுவை சிகிச்சை ஒன்றுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கடன் பெற முடிகின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், இதே நாளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த ஒரே வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. அந்தப் போராட்டக்காரர்கள் எரித்தது வீட்டையல்ல, ஒரு வரலாற்றை. அந்த வீட்டில் பெறுமதிமிக்க நூலகம், மதிப்புமிக்க சிலைகள், மதிப்புமிக்க ஓவியங்கள் போன்று பல பொருட்கள் இருந்தன.
அவர் தனது வீட்டை இழந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உங்களின் வீட்டு உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக எமது தலைவர்கள் பதவி விலகிச் செல்லும்போது, வர்த்தகர்கள், கற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது நாட்டிற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் முன்னோக்கி வந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.
நெருக்கடி காலங்களில் மட்டுமே ஒரு உண்மையான தலைவரை கண்டுகொள்ள முடியும். ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், அஸ்வெசும மற்றும் உறுமய போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பணியாற்றினார்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment