சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (11) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியினுள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரினால் கூட்டாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.
அதற்கமைய, நாளையதினம் வாய் மூல விடைக்கான வினாக்களை அடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த விலங்கின நலம்பேணல் சட்டமூலத்தை எதிர்வரும் தினமொன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment