நாடு மிக மோசமான பொருளாதார சிக்கலில் இருந்தபோது நாட்டைப் பொறுப்பேற்று ஜனாதிபதி பல கொள்கைகளை அமுல்படுத்தியுள்ளார். இந்தக் கொள்கைகள் நீடித்து நிலைக்க வேண்டுமாயின், மக்களும் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது.
இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். இதன் பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் மேலும் உரையாற்றிய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குறிப்பாக சம்பள உயர்வுகளைக் கோரி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும்போது, எவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்குவது, சம்பள உயர்வுகளை வழங்குவது என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நாட்டை கட்டியெழுப்பி, எதிர்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். இன்னமும் கடன் வாங்கி பயணிக்கப் போகிறோமா அல்லது நாட்டை சரியாக நிர்வகித்து, சரியான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
தூரநோக்குடன் செயல்பட்டு, பொருளாதாரத்தில் நீடித்து நிலைக்க நாம் பணியாற்றி வருகிறோம். இந்த நிலைமையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்ணோடும், கடலோடும் சொந்தப் பொருளாதாரத்தில் நிற்கும் ஒரு மாவட்டம். இங்கு நீர்ப்பாசனத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான பணிப்புரைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனால் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றிய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இதனைத்தவிர மாற்று வழிகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
உறுதியான தளம் இல்லாமல் நாங்கள் கட்டிடம் கட்ட முடியாது. எனவே, அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக நல்ல தலைவரை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்.’’ என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். இ. எம். டபிள்யூ. ஜி. திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment