‘’எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி பலருக்கும் அழைப்பு விடுத்தார். யாரும் இந்நாட்டைப் பொறுப்பேற்ற முன்வரவில்லை. அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் கையில் பணம் இருந்தாலும் வரிசைகளில் பல நாட்கள் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த நாடு மீண்டும் மீண்டுவரக்கூடிய சூழல் இருக்கவில்லை. அந்நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக முன்வந்து, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்ப நாட்டைப் பொறுப்பேற்றார் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது.
இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். இதன் பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் மேலும் உரையாற்றிய வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். அவரின் தலைமைத்துவத்துதடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சியால் படிப்படியாக பொருளாதாரம் எழுச்சி கண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
நாடளாவிய ரீதியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் பாரிய திட்டத்தை ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார். இதுவரை வசித்து வந்த காணிகளுக்கு உரிமையற்றவர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த உரிமை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
இன்று ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் கல்வித்துறையில் மேலும் வளர்ச்சியடையும்.’’ என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். இ. எம். டபிள்யூ. ஜி. திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment