படைவீரர்களுக்கான காணி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்று (14) நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவின் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க செயல்படவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கத்தவர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கடமைகளின்போது உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர் மற்றும் இயலாமைக்குட்பட்டோர், இளைப்பாறிய அத்துடன் தற்போது பணியில் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முப்படையினர், இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினருக்கு வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கப்படவுள்ளன.
படை வீரர்களுக்கு காணி வழங்கும் இந்த வேலைத்திட்டம் இதற்கு முன்னர் பல தடவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய படைவீரர்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலித்து துரிதமாக ஏற்பாடு செய்வது இந்த குழுவின் பொறுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment