உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணிகளுக்கு பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளை பெற்றுக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன், மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர் திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டன.
இத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
குறிப்பாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இத்திட்டத்தை விரைவில் நிறைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment