நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு 06 அம்ச விடயங்களை, பாத்ஃபைண்டர் மன்றத்தின் ஸ்தாபகரான மிலிந்த மொரகொட முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ஆறு அம்ச விடயங்களை தெரிவித்தார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அரை மனதுடன் முன்வைத்த பொருளாதார மறுசீரமைப்புகள் முக்கிய பங்காற்றுவதே கசப்பான உண்மை.
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தனியார்மயமாக்கல் என்பன, வெற்றிகரமான அபிவிருத்தி திட்டத்தின் ஒருங்கிணைந்த விடயங்களென்ற உண்மையை சகல அரசியல் கட்சிகளும் சமூகங்களும் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும்.
மிலிந்த மொரகொட முன்வைத்துள்ள ஆறம்ச விடயங்களும் பின்வருமாறு,
01. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரேயொரு தீர்வாக துரித பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். ஏற்றுமதி மற்றும் வௌிநாட்டு முதலீடுகள் மூலம் இதை அடைய முடியும். இவ்வாறான வழிமுறைகள் பல நாடுகளில் துரித அபிவிருத்திக்கும் ஏழ்மை நிலையை போக்கவும் உதவின.
02. போட்டித்தன்மை, உலகளாவிய தொடர்பு, தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சிறந்த கொள்கைகளை முன்வைத்து சிறந்த பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு நாட்டை ஆளும் அரசியல் சந்தேகத்துக்கிடமின்றி அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே இலங்கையில் சிறந்த பொருளாதார மாற்றம் ஏற்படும்.
03. இலங்கை தனது பொருளாதார சரிவிலிருந்து மீண்டெழ வேண்டுமானால் அடுத்த 10 வருடங்களுக்கு வருடாந்த வளர்ச்சி வீதம் 5% க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
04. தற்போதைய கணிப்புகளுக்கமைய பொருளாதார நிலைமை எதிர்வரும் 2032ஆம் ஆண்டுவரை வருடாந்தம் சுமார் 3% க்கும் அதிகமான வளர்ச்சியை எட்டுமென்று எதிர்பார்க்கப்படவில்லை. மேலும் 2032ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கடன் விகிதம் 95% ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட இலங்கைக்கு அதன் கடனை செலுத்தும் நிலைமை கேள்விக்குறியாகலாம். இதன் விளைவாக மீண்டும் மறுசீரமைப்பு மற்றும் சிக்கன நிலைமை தேவைப்படும்.
05. பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய விடயங்கள் எந்தவொரு வெற்றிகரமான அபிவிருத்தி திட்டத்தின் ஒருங்கிணைந்த விடயங்களென்ற உண்மையை அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகமும் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயங்களை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டியது அவசியமாகும்.
06. அனைத்து கட்சிகளும் தமது முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டுமென்பதுடன், அவர்கள் எவ்வாறு நிதி உதவியளிக்கவுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களின் போது அனைவரையும் கவரும் வகையில் வாக்குறுதிகளை முன்வைத்து, பதவியேற்ற பின்னர் மக்களை தவறாக வழிநடத்தும் யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
No comments:
Post a Comment