(நா.தனுஜா)
இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்து வரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலைவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத் திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
'இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது.
இந்நெருக்கடியானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 6.2 மில்லியன் பேரை உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. 2023 ஒக்டோபரில் 24 சதவீதமான குடும்பங்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டது.
இருப்பினும் இவ்வாண்டில் பணவீக்க வீழ்ச்சியுடன் நிலைமை ஓரளவுக்கு ஸ்திரமடைந்து வருகின்றது. எவ்வாறெனினும் நாடளாவிய ரீதியில் 43 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கான மாற்றுவழிகளையும், 42 சதவீதமான குடும்பங்கள் உணவைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்றுவழிகளையும் கையாண்டு வருவதனால், இது குறித்த கரிசனை இன்னமும் தொடர்கின்றது' என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு தற்போது இலங்கை காலநிலை சார்ந்த சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது எனத் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, அதிகரித்து வரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதுடன் விவசாயத்துறை மீதும் அழுத்தங்களைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு நிலைவரம் படிப்படியான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரும் வேளையில், பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களுக்கான உடனடி உதவி, ஆரம்ப மீட்சிக்கான உதவி மற்றும் நீண்டகால அடிப்படையில் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான உதவி என்பவற்றை உலக உணவுத் திட்டம் வழங்கி வருகின்றது.
அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் பதிவான அதிக மழைவீழ்ச்சியின் விளைவாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 255 குடும்பங்களுக்கு 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப்பொருள் உதவிகளை வழங்கியிருக்கும் உலக உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பு தொடர்பில் 379 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களுக்கும், அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 2 கல்வி வலயங்களின் கல்வியியல் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகளையும் நடாத்தியுள்ளது.
No comments:
Post a Comment