அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 27, 2024

அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நாட்டிற்குள் இயற்கை மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அத்துடன் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்குவது அவசியமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் விசேட திறன்கள் மற்றும் தயார்நிலைகளை அவதானிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் செவ்வாய்க்கிழமை (26) மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணிக்கு விஜயம் செய்தார்.

மத்தேகொடவில் உள்ள இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியும், இலங்கை பொறியியலாளர் படையணியின் கேர்ணல் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இராணுவ உபகரணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிகுண்டுகளை அகற்றுதல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் திறன்கள் மற்றும் இராணுவப் பொறியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கக்காட்சியும் இதன்போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இரசாயன, உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிபொருட்கள் அகற்றல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமைத்துவ கருவி மற்றும் உபகரணங்களை அமைச்சர் தென்னகோன் பார்வையிட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய செயல்விளக்கம்களையும் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

இலங்கை இராணுவ பொறியாளர் சேவைகளின் கேர்ணல் நிலைக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, பொறியியல் பிரதானி மேஜர் ஜெனரல் ஷேவான் குலதுங்க, GOC 59 பொறியாளர் பிரிவின் மேஜர் ஜெனரல் கபில டோலகே மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment