தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
2021/2022ம் கல்வியாண்டிற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்திற்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்களுக்கான கல்வி ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக இம்மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நேரடியான கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அழைக்கப்பட்டமையே இந்நிகழ்வின் தார்ப்பரியம் ஆகும்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் முதலாம் வருட மாணவர்களாக நானூறு மாணவர்கள் இவ்வருடம் கலை கலாசார பீடத்திற்கு உள்வாங்கப்பட்டமை சிறப்பிக்குரியது.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை விடயத்தில் அரசு மிகுந்த இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளது.
பகிடிவதையினால் நாட்டில் உயர் கல்வியில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக நல்ல அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமே தவிர வெறுமனே பகிடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுகின்ற போதிலும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதாகவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிடுவதாகவும் மக்களின் வரிப் பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் கல்வி என்ற இலக்கை அடைந்து கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பல கனவுகளுடன் இங்கு வந்துள்ளனர். எனவே பல்கலைக்கழக வளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெரும் பங்காற்ற வேண்டுமென்றார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment