இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்ய தென் கொரியா ஆர்வமாகவுள்ளது. அந்நாட்டின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான கங் இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கையில் மீன்களுக்கான உணவு, கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மீன்பிடி படகு தொழிற்சாலை ஆகிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் கடற்றொழில் துறைமுக வளாகத்தில் இத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் அவர் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
தொடரந்து கருத்து தெரிவித்த கொரிய தொழிலதிபர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாம் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டால் பல பில்லியன் ரூபாக்களை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் அதனடிப்படையில் குறித்த தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், இத்தொழிற்சாலை இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அதன் பொருட்டு வர்த்தக அமைச்சுடன் பேசி உரிய நவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்று (29) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் குற்றங்கள் குறித்த விசாரணை அதிகாரியும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நாட்டில் கடுமையான வறட்சி நிலவிய நிலையில் நன்னீர் நிலைகளில் மீன்கள் இறந்தது மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொடர்பாக நெக்டா நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே நன்னீர் மீன்வளர்ப்பு செய்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று அமைச்சில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment