முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பான 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை 29 ஆம் திகதி (நேற்று) நீதி அமைச்சில் வைத்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் (பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் உள்ளடங்கலாக) பலரும் கந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி நீதி அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது எனவும் தேவைப்பட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இவ்வறிக்கைக்குச் சார்பாக ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்றுத்தர முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களினது உரிமையாகும், அது இம்மக்களின் விருப்பங்களுக்கு உட்பட்டவாறே திருத்தப்பட வேண்டும், அதனை மார்க்க விதிகளுக்கு முரண்படாத வகையில் மக்களின் அபிலாஷையினைப் பிரதிபலிக்கும் விதமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை திருத்தத்திற்கான பரிந்துரையை அமைத்துத் தந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் திருத்தி அமைக்க நினைப்பது ஆச்சரியமாக உள்ளது, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறினார்.
மேலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும், முஸ்லிம் சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைவாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைத் தாங்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் சட்டத்தரணி நுஸ்ரா சறூக் கூறும்போது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது முஸ்லிம் சமூகத்தினை ஆளுகின்ற சட்டமாகும். அதன் திருத்தங்களை முஸ்லிம்கள் கையாள வேண்டும்.
அது பற்றிய திருத்தத்தில் எமது இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் எமது சமூகத்தில் மிகச் சிலர் மட்டுமே எனவும், மேலும் பெண் காதி நீதிபதிகள் நியமனத்திற்கு வெளிநாடுகளைச் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர், ஆனால் அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை பின்பற்றி மட்டுமே இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெண் காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்துரைத்த அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய், 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு பெண் நீதிபதிகளும் நியமிக்கப்படவில்லை எனவும் அது ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும் எனவும், அத்துடன் காதி நீதிபதிகளின் மாதாந்த ஊதியம் ஒரு சிறிய தொகையாகும், அதுவும் காதி நீதிமன்றங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாகின்றது என்றும் எனவே அது பற்றியும் நீதி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment