எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற தினங்களான 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
திங்கட்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த தினங்களில் விவாதிக்கப்படவுள்ளதால் வாக்கெடுப்பின்போது அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சபையில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள நிலையில் ஆளும் தரப்பினர் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment