(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் தீர்மானிக்கட்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு தந்திரத்தனமாக காலத்தை கடத்துகிறார். 13 ஆவது திருத்தம் சிங்களத் தலைவர்கள், கட்சிகளின் ஆதரவுடன் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஒற்றையாட்சிக்கு 13 ஆவது திருத்தம் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆகவே 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய சத்தியப்பிரமாணத்துக்கமைய செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், அரசியலமைப்பின் பிரதான அங்கமாக உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கங்களும் முழுமையான கவனம் செலுத்தவில்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகவே 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயாக பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வாக அமையும் என்று அப்போதைய காலகட்டத்தில் எவரும் நம்பவில்லை.
1948 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் இனம், மொழி, பல்கலைக்கழக அனுமதி உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். இந்தப் பிரச்சினைகள் பிற்பட்ட காலங்களில் இன வன்முறையாக மாற்றமடைந்தது.
டட்லி சேனாநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து பதவியேற்ற எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டரநாயக்க தான் சிங்களவர்களின் காவலன் என்பதை காண்பிப்பதற்காக 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாக தனிச் சிங்கள சட்டம் பார்க்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக தமிழர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவ்வாறான நிலையில் அப்போதைய நிலையில் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு பௌத்த தேரர்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் பண்டா - செல்வா ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இனக் கலவரம் தோற்றம் பெறுவதற்கு தனிச் சிங்கள சட்டம் காணப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக பிரச்சினை, இன மற்றும் மொழி சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 1987.07.29 ஆம் திகதி அப்போதைய இந்திய பிரதமர் ராஜூவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இடையில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து எட்டு மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. பொலிஸ், காணி அதிகாரங்கள் இதுவரை மத்திய அரசாங்கத்தினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு அமைய வட, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு சட்டவிரோதமானது, இரு மாகாணங்களும் தனித்தனியாக செயற்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழர்கள் ஏற்றுக் கொண்டபோதும் மாகாணங்களின் முழுமையான நடைமுறைத்தன்மை இல்லாத காரணத்தால் அப்போதைய முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழீழத்தை பிரகடனப்படுத்தி இந்தியாவுக்கு சென்றார்.
13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் பல குறைகளுடன் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்து அரசியலமைப்பின் பிரகாரம் இதுவரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்று இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இதுவரை 13 அமுலாக்கம் இழுபறி நிலையில் உள்ளது. அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சி என்பது வேறூன்றப்பட்டுள்ளதால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
தமிழர் தாயகத்துக்கு சமஷ்டியே தீர்வு என கருதும் தமிழர்கள் 13 ஆவது திருத்தம் ஊடாக தீர்வு கிடைக்கும் அதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு வழங்கக்கூடாது என்ற கடும்போக்கான சிங்கள அரசியல்வாதிகள் இன்றும் கடுமையான எதிர்ப்பை மாத்திரம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க பேசு பொருளுக்கு மத்தியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
பயங்கரவாத தடைச் சட்டம், தேசிய பாதுகாப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர் தாயகத்தின் மீதான அடக்குமுறைகள் தீவிரமடைந்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாது பாராளுமன்றம் தீர்மானிக்கப்பட்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு தந்திரத்தனமாக செயற்பட்டு காலத்தை கடத்தி வருகிறார். இதுவும் நாங்கள் கடந்த காலத்தில் ஏமாற்றமடைந்ததைப்போல் உள்ளது. ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீது அச்சம் கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை தவிடு பொடியாக்கும் வகையில் சிங்கள மயமாக்கம் தீவிரமடைந்துள்ளது. தேரவாத பௌத்த கொள்கையுடன் ஊறிப்போயுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பில் ஒரு அங்கமாக உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஏன் பின்வாங்குகிறார் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பல சம்பங்களை அரசாங்கம் இன்றும் சீர்த்தூக்கிப் பார்க்கவில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதையாக தற்போதைய நிலை காணப்படுகிறது. அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற போலி வார்த்தைகள் மீது எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண திம்பு பேச்சுவார்த்தை முதல் இன்று வரை பல முனைப்பான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவில்லை.
75 ஆவது சுதந்திரத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் ஏதும் சாத்தியப்படவில்லை. தற்போது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார். இதுவும் நகைப்புக்குரியது.
இந்த நாட்டில் தமிழர்கள் தமது பண்பாட்டுடன் வாழ முடியாது அதற்கு சிங்கள பேரினவாத அரசியலமைப்பு இடமளிக்காது என்பதற்காக ஆயுதமேந்தி போராடியவன் என்பதையிட்டு பெருமை கொள்கிறேன்.
தமக்கு தேவையானபோது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும், தமக்கு தேவையானபோது தீர்வுத் திட்ட அறிக்கைகளை அழிப்பதும் சிங்களத் தலைவர்கள் துறைபோனவர்கள் என்பதை உலகம் நன்கு அறியும்.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 21 முறை திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் ஒன்றும் குறை பிரசவம் அல்ல, 13 ஆவது திருத்தத்தின் ஒவ்வொரு சரத்துக்களும் இலங்கையின் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் தன்மையில் உள்ளது. ஏனைய அரசியல் சீர்த்திருத்தங்களை விடவும் 13 ஆவது திருத்தம் பெருமையுடையவது, பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஆகவே தமிழர்களினால் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது என்று கோசம் எழுப்புவது முறையற்றது. நாட்டின் ஒற்றையாட்சி தன்மையை 13 ஆவது திருத்தம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்கள், ஆகவே சகலரும் அதற்கமைய செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment