(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் வேண்டும். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஏதும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர்கள் எவரும் பங்குப்பற்றுவதில்லை.
நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்றத்தில் உள்ள தெரிவுக் குழுக்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப எமக்கு அனுமதி இல்லை.
ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற விவாவதம் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தொடர்ந்து திருகோணமலை பகுதி, காங்கேசன்துறை, பலாலி விமான நிலையம் ஆகியன இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து இதுவரை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவில்லை, ஆகவே எமக்கு விவாதம் வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment