(எம்.ஆர்.எம்.வசீம்)
ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவர் மீதும் ஐக்கிய தேசிய கட்சியினால் விதிக்கப்பட்டிருந்த தடைகளை வாபஸ் பெற்றுக் காெண்டு கட்சியின் செயற்குழுவில் அவர்களை மீண்டும் இணைத்துக் காெள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நேற்று (01) மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் கூடியபோதே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாகவே அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றம் சென்றனர்.
கட்சியின் யாப்பை மீறி செயற்பட்ட காரணத்தினால் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து காெண்ட அனைவருக்கும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்தனர். அத்துடன் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, செயற்பட்டு வந்ததனர்.
அதன் பிரகாரம் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தபோதும் கட்சியின் தலைமையகத்துக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று கட்சியின் செயற்குழு ஜனாதிபதி தலைமையில் கூடியபோது, இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவதற்கும் அவர்கள் இருவரையும் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளவும் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment