(இராஜதுரை ஹஷான்)
தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும், அதனால் வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது. அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அவதானம் செலுத்தப்போவதில்லை என்று கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உப்பு பிரச்சினை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் தற்போது அமைச்சரவை மாற்றத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படுகிறோம்.
அமைச்சரவை மாற்றம் மற்றும் பிரதமர் பதவியில் மாற்றம் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்வது முற்றிலும் அடிப்படையற்றது.
அமைச்சரவையில் சகல உறுப்பினர்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்ற நிலையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை.
ஊழல் மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த கால அரசாங்கங்கள் ஊழல்வாதிகளை பாதுகாத்தது. எமக்கும் ஊழல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றன. நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்களின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை.
ஆகவே ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment